ஆசிரியர் தேர்வு வாரியம்: முதுநிலைத் தமிழாசிரியர் தேர்வில் ஒரு வினா
பாட்டியல் நூலார் பாக்களை வருண
முறையில் பிரித்துக் கூறுமிடத்து வெண்பாவை அந்தண வருணமாகக் கூறுவர்.
அம்முறையில் வெண்பா அந்தணர்பா எனப்படும். (ப.18)
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.05.12) நடத்திய முதுநிலை ஆசிரியர் தேர்வில் தமிழ்ப் பாடத்திற்கான வினாத்தாள் சொல்லும்படியானதாக அமைந்திருந்தது. மூன்று மாதங்களாகத் தமிழகம் எங்கும் களைகட்டிய ‘தனிப் பயிற்சி வகுப்புகளில்’ கொடுக்கப்பட்ட பக்கம் பக்கமான வினாக்களில் (இவற்றை மெட்டீரியல் என்று சொன்னார்கள்) இடம்பெறாத பல வினாக்கள் இத்தேர்வில் வந்திருந்தன. அது நல்ல விஷயம்.
மேலோட்டமாகப் பார்த்தால் எளிமையாகத் தோன்றினாலும் தமிழ் இலக்கியத்தில் அடிப்படைக் கல்வியைச் சிறப்பாகக் கற்றவர்கள் மட்டுமே நன்றாக எதிர்கொள்ளும் விதத்தில் வினாக்கள் அமைந்திருந்தன. ‘உண்மை அறிவே மிகும்’ என்பதற்கேற்ற வினாத்தாள் என்று தனிப்பயிற்சி வகுப்புகளை வைத்து இதைச் சொல்லலாம்.
இலக்கணம் தொடர்பாகக் கிட்டத்தட்ட முப்பது வினாக்கள் அமைந்திருந்தன. அதில் ஒன்று:
36. குணசாகரர் எந்தப்பாவினை அந்தணப்பா என்று குறிக்கிறார்?
A) வெண்பா B) ஆசிரியப்பா C) கலிப்பா D) வஞ்சிப்பா
யாப்பிலக்கண அறிமுகம் உள்ளவர்கள் இந்த வினாவிற்கு ‘வெண்பா’ என்று எளிதாக விடையைத் தேர்வு செய்திருப்பார்கள். பிற பாக்களுக்குரிய தளைகள் எவையும் கலவாமல் தனக்குரிய இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகியவை மட்டுமே வரப்பெறுவது வெண்பா. பிற வருணத்தவரின் கலப்பில்லாத சுத்த சுயம்புகள் பார்ப்பனர்கள். ஆகவே வெண்பா அந்தணர்பா ஆகிறது.
ஆசிரியப்பாவை அரசர்பா என்றும் கலிப்பாவை வணிகர்பா என்றும் வஞ்சிப்பாவை சூத்திரர்பா என்றும் சொல்வர். இலக்கணத்துள் இப்படி வருணத்தைப் புகுத்தும் முறை யாப்பருங்கல விருத்தியுரை எழுதப்பட்ட காலத்திற்கு முன்னரே வந்துவிட்டது என்பது அவ்வுரை மூலமாகத் தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரை,
வேதியர், அரசர், வணிகர், சூத்திரர் என்னும் சாதிமேல் சார்த்தி வழங்குவாரும் உளர் எனக் கொள்க. (ப.231)
என்று கூறுகிறது. ’சார்த்தி வழங்குவாரும் உளர்’ என்பதால் விருத்தியுரையாசிரியர் காலத்திற்கு முன்னரே இது வழக்கிற்கு வந்துவிட்டது என்பது விளங்குகிறது. மேற்கோளாக வெண்பா ஒன்றையும் உரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். அது:
வெண்பா முதலாக வேதியர் ஆதியா
மண்பால் வகுத்த வருணமாம் ஒண்பா
இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்
மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து.
இவ்வெண்பா எந்நூலில் இடம்பெற்றது என்பது தெரியவில்லை. பிற்காலத்தில் எழுந்த பாட்டியல் நூல்கள் பலவற்றிலும் பாக்களை வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் பகுக்கும் முறையைக் காணலாம். யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதியில் ‘அந்தணர்பா’ என்பதற்குப் பாவலரேறு ச. பாலசுந்தரம் தரும் விளக்கம்:
வருணப் பாகுபாட்டை இலக்கணத்துள் புகுத்திய விதம், அது நிலைபெற்ற காலம் ஆகியவற்றின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்குள் இப்போது செல்லவில்லை.
யாப்பருங்கல விருத்தியுரையும் பாட்டியல் நூல்களும் சொல்லும் ஒரு செய்தியைக் குணசாகரர் மீது ஏற்றி வினா கேட்கப்பட்டுள்ளது. இது சரியா?
யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதியவர் குணசாகரர். காரிகையுரையில் ஓரிடத்திலும் பாக்களை வருண அடிப்படையில் பகுக்கும் செய்தி வரவில்லை. அப்படியிருக்கக் ’குணசாகரர் எந்தப்பாவினை அந்தணப்பா என்று குறிக்கிறார்?’ என்னும் வினா எப்படிச் சரியானதாகும்? வினாவைச் சரியானது என்று கொண்டால் விடை ‘குணசாகரர் எந்தப்பாவையும் அந்தணப்பா என்று குறிக்கவில்லை’ என்றே அமையும். ஆனால் விடை வாய்ப்புகளில் அது இல்லை.
இந்த வினாத்தாளைத் தயாரித்தவர் எந்தப் பின்னணியில் இவ்வினாவைக் கேட்டிருப்பார்? என் மாணவர் ஒருவரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ‘யாப்பருங்கலக் காரிகை’ நூல் ஒன்றைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். திருவையாறு அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. திருஞானசம்பந்தம் அவர்கள் வெளியிட்டுள்ள காரிகை நூல் அது. பாடத்திட்ட நோக்கில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நூல். ஒவ்வொரு தலைப்புக்கு முன்னும் சுருக்கமாகக் கருத்துக்களைத் தொகுத்துத் தருவது திருஞானசம்பந்தம் அவர்களின் முறை. அவ்வாறு ‘வெண்பாவைப் பற்றியக் கருத்துக்கள்’ என்னும் தலைப்பில் அவர் கொடுத்துள்ள கருத்து இது:
...வேற்றுத்தளையும் அடியும் விரவாமல் அமைந்து மேம்பட்டு விளங்குவதால் வெண்பா எனப் பெயர் பெற்றது. இதற்கு வெள்ளைப்பா, அந்தணர்பா என்னும் வேறு பெயர்களும் உண்டு. (ப.85)
இது குணசாகரர் கருத்தல்ல. வேறிடத்திலிருந்து திருஞானசம்பந்தம் எடுத்துக் கொடுத்ததுதான். குணசாகரர் உரையைப் பார்க்காமல் திருஞானசம்பந்தம் அவர்களின் கருத்தை மட்டும் பார்த்த ஒருவர் குணசாகரர் உரைக்குள் வரும் கருத்துத்தான் இது என மயங்கி அதிலிருந்து இவ்வினாவைக் கேட்டிருக்கக் கூடும்.
எப்படியிருப்பினும் இவ்வினா தவறானது என்பதில் ஐயமில்லை. ஆகவே இவ்வினாவினைத் தவறாகக் கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருதி வினாப்பட்டியலில் இருந்து இதை நீக்கிவிட வேண்டும். அல்லது எந்த விடையைத் தேர்வு செய்தவராக இருந்தாலும் அவருக்கு மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும். தேர்வர்கள் கோரிக்கை வைப்பார்களா?
----------------
பயன்பட்ட நூல்கள்:
1. மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை (ப.ஆ.), யாப்பருங்கலம், 1998, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மறுபதிப்பு.
2. ச. பாலசுந்தரம், யாப்பிலக்கணக் கலைச்சொல் - பொருள் விளக்க அகராதி, 1998, தஞ்சாவூர், தாமரை வெளியீட்டகம்.
3. ச. திருஞானசம்பந்தம், யாப்பருங்கலக்காரிகை, 2007, திருவையாறு, கதிர் பதிப்பகம்.
பயன்பட்ட நூல்கள்:
1. மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை (ப.ஆ.), யாப்பருங்கலம், 1998, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மறுபதிப்பு.
2. ச. பாலசுந்தரம், யாப்பிலக்கணக் கலைச்சொல் - பொருள் விளக்க அகராதி, 1998, தஞ்சாவூர், தாமரை வெளியீட்டகம்.
3. ச. திருஞானசம்பந்தம், யாப்பருங்கலக்காரிகை, 2007, திருவையாறு, கதிர் பதிப்பகம்.